தமிழ் முகில்

Tuesday, May 31, 2005

விளம்பரமா இந்த வாழ்க்கை!?

தமிழ் வார இதழ்களில் நம்பர் 1, நம்பர் 1 தமிழ் வார இதழ் - இரண்டிலும் தற்போது வித விதமாக போஸ் கொடுத்து விற்பனையை பெருக்கிக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். ஒவ்வொரு படம் முடித்துவிட்டும், 'விடுகதையா இந்த வாழ்க்கை...' எனவிடை தேட இமயமலைக்குச் செல்லும் ரஜினி, இந்த முறை பத்திரிகைகளுக்கு 'பத்திரிகை' வைத்துவிட்டு சென்றுள்ளார் போல! காவி வேட்டி, காசித் துண்டு, கிழிந்த கதர்ச் சட்டை, ரப்பர் செருப்பு, கையில் ஊன்றுகோல், கையோடு ஒரு ஸ்டில் போட்டோகிராபர், அங்கங்கே விதவிதமான ஸ்டில்ஸ்...

"என்ன இல்லை இவரிடம்...?இந்த ஜென்மத்துக்குப் போதுமான புகழ் பார்த்தாகி விட்டது. இன்னும் ஏழு தலைமுறைக்குத் தேவையான பொருள் சேர்த்தாகிவிட்டது. இவர் பேசினால் செய்தி. பேசாவிட்டாலும் செய்தி. புதிய படத்துக்கு பூஜை போட்டாலோ கொட்டும் கரன்ஸி அருவி. நிரந்தரமாக லட்சக்கணக்கான இதயங்களிலும், நிம்மதி தேடும்போதெல்லாம் இமயத்திலும் வசிக்கிற வாழ்க்கை...." - இப்போது அந்த இமய வாழ்க்கையை வைத்துக்கூட விளம்பரம் தேடிக் கொள்ளும் முயற்சி.நான் வார இதழ்களை குறை சொல்லவில்லை. (பின்னர் அவர்கள் எப்படி விற்பனையை பெருக்க முடியும்!)

சந்திரமுகியின் வெற்றியில் மீட்ட புகழ் போதாதா? தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என இதுநாள்வரை கூறி வந்த 'தீட்சை' வாழ்க்கையையும் 'மாஸ்' ஏற்ற கடை விரிக்க வேண்டிய அவசியம் என்ன?

Image hosted by Photobucket.com

வெள்ளித்திரையில் எதோ ஸ்டைலாய் சாகஸம் பண்ணுவதுபோல், பக்கத்திற்கு பக்கம் மலையில் ஏறுவதாய், குறுகிய குகைக்குள் இறங்குவதாய் 'போஸ்' கொடுப்பதன் காரணம் என்ன?
ஒருவேளை 'பாபா' படம் வெளியாவதற்கு முன் ரஜினி இப்படி விளம்பரப்படுத்தியிருந்தால், படமாவது ஓடியிருக்கலாம்...


கிட்டுமோ ஞான யோகம்? கிடைக்குமோ குருவின் பாதம்?
கட்டுமோ மூல வாசி? காணுமோ கயிலை வீடு?
எட்டுமோ நாக லிங்கம்? ஏற்றுமோ தீப சோதி?
தட்டுமோ பளிங்கு மேடை தனையறியார்க்கு நெஞ்சே!
- நெஞ்சறி விளக்கம் -
(அர்த்தம் புரிகிறதா?)
விடுகதையா இந்த வாழ்க்கை...இல்லை, விளம்பரமா இந்த வாழ்க்கை!?